ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உலகப் புத்தகத் திருவிழா 37 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் முதன்முறையாகத் தமிழ் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
பபாசி சார்பில் ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் மாபெரும் அரங்கு அமைக்கப்படவுள்ளது.
இப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெறுவதன் மூலம் சர்வதேச அரங்கில் தமிழ் பதிப்புலகம் காலடி எடுத்துவைக்கிறது.
தமிழ் பதிப்புலகத்தின் சார்பில் ஷார்ஜாவில் அமைக்கபடும் புத்தக அரங்கில் தமிழின் முப்பது முன்னணி பதிப்பகங்கள் ஒன்றிணைந்து தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்துகிறார்கள்.
இந்தப் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் கனிமொழி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள்
சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வரையான ஆயிரக்கணக்கான முக்கிய நூல்கள் இடம்பெறுகின்றன.
வரலாறு, அறிவியல், சமூகம், பண்பாடு, மருத்துவம், கலைகள் எனப் பல்துறை சார்ந்த முக்கிய நூல்கள் யாவும் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளன.
புத்தகத் திருவிழாவை ஒட்டி ஷார்ஜாவில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்புச் செய்யப் பபாசி முயற்சியெடுத்து வருகிறது. அமீரகத்திலுள்ள தமிழ் சங்கங்கள். இலக்கிய அமைப்புகள், ஊடகங்கள் இதற்குப் பெரும் ஆதரவு தந்துள்ளன.
ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் பதிப்பாளர்கள் இருபது பேர்கள் அடங்கிய குழு பயணம் செய்யவுள்ளது. இந்தக் குழுவோடு இணைந்து கொள்ள விரும்பும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பபாசியைத் தொடர்பு கொள்ளவும்.
அமீரகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இது அரியதொரு வாய்ப்பாகும்.
அமீரகத் தமிழ் மக்கள் யாவரும் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு வாருங்கள்.
தமிழ் நூல்களை வாங்கி மகிழுங்கள்